இவ்வசனம் (23:18) நிலத்தடி நீர்பற்றி பேசுகிறது.
பூமியின் மேற்பரப்பில் தண்ணீர் இருப்பது போல் பூமியின் கீழ்ப்பரப்பிலும் பெரிய ஆறுகளும், ஏராளமான தண்ணீரும் உள்ளன.
கடல் நீர் மணல் வழியாக கீழே இறங்கி அதுதான் நிலத்தடி நீராகச் சேமிக்கப்படுகிறது என்று தான் மக்கள் முதலில் நம்பினார்கள். ஆனால் அது உண்மை அல்ல என்று இப்போது கண்டுபிடித்துள்ளனர்.
கடல் நீர் நிலத்தடி நீராகச் சேமிக்கப்படுகிறது என்றால் நிலத்தடி நீர் ஒருபோதும் குறையக் கூடாது. எப்போதும் கடலில் நீர் இருந்து கொண்டே இருப்பதால் எப்போதும் நிலத்தடி நீரும் குறையாமல் இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதால் கடல் நீருக்கும் நிலத்தடி நீருக்கும் சம்மந்தம் இல்லை என்று இப்போது கண்டுபிடித்துள்ளனர்.
ஆகாயத்திலிருந்து பெய்யும் மழை ஆங்காங்கே பூமியால் உறிஞ்சப்பட்டு அந்த நீர் தான் பூமிக்கு அடியில் நிலத்தடி நீராகச் சேமித்து வைக்கப்பட்டுள்ளது என்று கிபி 1580ல் கண்டறிந்தனர். இதனால்தான் கடலுக்கு அருகில் உள்ள நிலத்தடி நீர் உப்பாக இருப்பதில்லை.
வானத்திலிருந்து அளவோடு தண்ணீரை இறக்கினோம். அதைப் பூமியில் தங்க வைத்தோம் என்று பலநூறு ஆண்டுகளுக்கு முன்னரே இந்தப் பேருண்மைகளை திருக்குர்ஆன் தெளிவுபடுத்தி விட்டது.
பெய்கின்ற மழை நீரை உறிஞ்சுவதற்கு ஏற்ப ஊர்களையும், நகரங்களையும் அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற மறைமுகமான வழிகாட்டுதலும் இந்த வசனத்திற்குள் அடங்கியிருக்கிறது.
No comments:
Post a Comment