அமெரிக்காவின் பிரபல நடிகையும் பாடகியுமான லின்ட்ஸே லொஹான் இஸ்லாத்தை தழுவியுள்ளதை உறுதி செய்ய முடிந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் நேற்று முன்தினம் செய்தி வெளியிட்டுள்ளன.
தனது சமூக வலைத்தள கணக்குகள் அனைத்தினதும் கடந்த கால பதிவுகளை அழித்துள்ள அவர், இன்ஸ்டாகிராம் வலைத்தளத்தில் 'அலைக்கும் ஸலாம்' எனப் பதிவிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
லின்ட்ஸே லொஹானின் இந்த மாற்றத்தை வரவேற்பதாகவும் அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் என உலகின் பல பாகங்களையும் சேர்ந்த முஸ்லிம்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர்.
2016 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் புனித குர்ஆனை படித்து வந்த இவர் இதன் மூலமாக தன்னில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக ஊடகங்களுக்கு பேட்டியளித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்தே அவர் தனது கடந்த கால பதிவுகள் புகைப்படங்கள் வீடியோக்கள் அனைத்தையும் கடந்த ஒரு வார காலத்திற்குள் அழித்துவிட்டு 'அலைக்கும் ஸலாம்' எனும் இஸ்லாமிய வாழ்த்தினை பதிவிட்டுள்ளதாக ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
அமெரிக்காவில் 1986 ஆம் ஆண்டு பிறந்த லின்ட்ஸே லொஹான் தற்போது லண்டனில் வசித்து வருகிறார். சவூதி அரேபியாவைச் சேர்ந்த நண்பர்கள் சிலர் தனக்கு அல் குர்ஆனை அன்பளிப்புச் செய்ததாகவும், அதனை வாசிக்கத் தொடங்கியதிலிருந்து தன்னுள் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டதை உணர்ந்ததாகவும் அண்மையில் துருக்கி ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் அவர் குறிப்பிட்டிருந்தார்.
''நான் இவ்வளவு காலமும் மிக மோசமான செயல்களையே செய்து வந்துள்ள ஒரு பெண் என்பதை இப்போது உணர்கிறேன். அவை அனைத்தையும் விட்டுவிட தீர்மானித்துள்ளேன்.
இப்போதுதான் நான் யார் என்பதை அறிந்து கொண்டுள்ளேன். எனக்கு லண்டனில் வைத்து சவூதி நண்பர்கள் குர்ஆனைப் பரிசளித்தார்கள். நான் அதனை எடுத்துக் கொண்டு நியூயோர்க் சென்று படிக்கத் தொடங்கினேன். அதன் மூலம் ஆன்மிக ரீதியாக என்னுள் மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டேன்.
எனினும் நான் குர்ஆனைப் படிப்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டதைத் தொடர்ந்து அமெரிக்கர்கள் என்னை விமர்சித்தார்கள். எனவே அமெரிக்காவை பாதுகாப்பான இடமாக நான் கருதவில்லை. நான் அமெரிக்காவை விட்டு வெளியேறி லண்டனில் குடியேற தீர்மானித்தேன். அங்கு நான் விரும்பிய வழியில் அமைதியாக வாழப் போகிறேன்'' என லின்ட்ஸே லொஹான் அண்மையில் துருக்கி ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.
இதேவேளை அண்மையில் துருக்கிக்கு தனிப்பட்ட விஜயம் ஒன்றை மேற்கொண்ட இவர் அங்கு தங்கியுள்ள சிரிய நாட்டு அகதிகளைச் சந்தித்து அவர்களுக்கான மனிதாபிமானப் பணிகளிலும் ஈடுபட்டார்.
அத்துடன் துருக்கி அதிபர் அர்துகானின் அரசியல் முன்னெடுப்புகளுக்கு ஆதரவாகவும் கருத்துக்களை வெளியிட்டிருந்தார். இதன்போது அவர் துருக்கியில் தனது உடலை முழுமையாக மறைக்கும் வகையில் ஹிஜாப் ஆடையை அணிந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
No comments:
Post a Comment